கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் ஆய்வு செய்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவு ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் பதிவு வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை காவல்துறை ஆணையர், அருண் கூறியிருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, ஞானசேகரன் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து, முக்கிய ஆவணங்கள், ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திய லேப்டாப்கள், செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள், 2 அட்டை பெட்டிகளில், வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்’கை வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.