/indian-express-tamil/media/media_files/5bZllk20o46UbFi7cRNU.jpg)
வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். வேலூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டம் உறையூர் லோட்டஸ் நகரை சேர்ந்த நீலகண்டன் என்பவர் திருச்சி தில்லைநகரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.
இதன் காரணமாக ஆசிரியர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த சரவணன் மற்றும் நீலகண்டன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நண்பர்களாகினர். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நீலகண்டன், தான் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்தால் ஓரிரு ஆண்டுகளில் அதனை இருமடங்காக திருப்பி தருகிறேன் என்று சரவணனிடம் கூறி உள்ளார்.
அதனை நம்பிய சரவணன் ரூ.35 லட்சத்தை பல்வேறு தவணைகளாக நீலகண்டனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னப்படி இருமடங்காக பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அதனால் சரவணன் தனது பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு நீலகண்டன் சில மாதங்களில் தருகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் அளித்தார்.
/indian-express-tamil/media/media_files/EzAvseYRLDhdM8JriVlx.jpg)
அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு, எஸ்.பி., உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பாபுரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில் சரவணன் ரூ.35 லட்சத்தை நீலகண்டனுக்கு கொடுத்ததும், அதனை அவர் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்ததும் உறுதியானது. இதையடுத்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருச்சிக்கு வந்து ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் நீலகண்டனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.