Tamilnadu Tamil News: தமிழகத்தில் அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடை முடிச்சூர் கிராமம்-2ல் கடந்த 25 ஆம் தேதி இரவு சட்ட விரோதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோக திட்ட அரிசியை வேன் மூலம் கடத்த முயன்ற போது, குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விற்பனையாளர் ஏ.கோமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இதனை அடுத்து விற்பனையாளர் ஏ.கோமதி பண்டகசாலை நிர்வாகத்தால் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தகுதியான அளவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முறையாக விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தி உள்ளார்.
அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாய விலை கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், குற்ற வழக்கு தொடரப்பட்டு, தொடர்புடைய பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது." என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.