க.சண்முகவடிவேல்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்மபெருமாள் ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் கோயிலுக்கு வந்தனர்.
இதில் தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த உமா என்பவர் தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஏறும்போது அவர்களை பின்தொடர்ந்து சாமியார் வேடத்தில் வந்த மர்மநபர் 7 பவுன் தங்கச்செயினை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உமா திருடன் திருடன் எனக் கூச்சலிட்டுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அந்த நபரின் சட்டை வேட்டி ஆகியவற்றை கழட்டி கோவில் வளாகத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பிறகு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த நபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil