டாஸ்மாக் நிதிநிலை அறிக்கை: 8 ஆண்டுகளாக வெளியிடாதது ஏன்? தொடரும் கேள்விகளும், விமர்சனங்களும்

டாஸ்மாக் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக வருடாந்திர அறிக்கையை வெளியிடாத நிலையில், நிதிநிலை அறிக்கைகள் குறித்து சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக வருடாந்திர அறிக்கையை வெளியிடாத நிலையில், நிதிநிலை அறிக்கைகள் குறித்து சந்தேகங்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tasmac Financial

தமிழக அரசின் முக்கியமான வருவாய் ஈட்டும் நிறுவனமாகத் திகழ்வது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் லிமிடெட் (டாஸ்மாக்). ஆனால், இந்த நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணக்குகள் மற்றும் நிதி செயல்பாடுகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையை வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடைசியாக வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கை 2016-17 ஆம் நிதியாண்டுக்கான 34வது அறிக்கையாகும்.

Advertisment

நிறுவனங்கள் சட்டம் 2013-ன் படி, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது செயல்பாடுகள், நிதிநிலை, சொத்துக்கள், பொறுப்புகள், வருவாய், செலவுகள் மற்றும் லாப நஷ்டம் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர அறிக்கையைத் தயாரித்து பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், இந்த அறிக்கையில் ஒரு சுயாதீன தணிக்கையாளரின் கருத்துகளும் இடம்பெற வேண்டும்.

டாஸ்மாக் ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால், அதன் வருடாந்திர அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களுக்கு அணுகும் வகையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், டாஸ்மாக் இந்த விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) போன்ற பிற அரசு நிறுவனங்கள் கூட 2023-24 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மட்டும் இதுவரை அறிக்கை வெளியிடாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி கூறுகையில், 2023-24 ஆம் நிதியாண்டு வரை டாஸ்மாக்கின் வருடாந்திர அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தயாரிப்பில் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அவை ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பது குறித்து விசாரிப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், டாஸ்மாக் அதிகாரிகள் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

Advertisment
Advertisements

டாஸ்மாக்கின் மீது அமலாக்கத்துறை (ED) சுமத்தியுள்ள முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஒரு சில குறிப்பிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக டாஸ்மாக் கொள்முதல் செய்ததுதான். இதனால் டாஸ்மாக் வருடாந்திர அறிக்கைகள் வெளியிடப்படாதது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. 2016-17 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் கூட, கொள்முதல், கொள்முதல் விலை நிர்ணயம் தொடர்பான கொள்கைகளை டாஸ்மாக் அவ்வப்போது மறுஆய்வு செய்து வலுப்படுத்த வேண்டும் என்று தணிக்கையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், விற்பனை செய்யப்பட்டவுடன் உடனடியாக விற்பனை ரசீதுகளை வழங்குதல், சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள இருப்பு சரக்குகளை அவ்வப்போது அடையாளம் காணுதல் மற்றும் பல்வேறு தளங்களில் உள்ள மென்பொருள்களை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் பரிந்துரைத்திருந்தார்.  இதனிடையே, எட்டு ஆண்டுகள் ஆகியும் டாஸ்மாக்கின் வருடாந்திர அறிக்கைகள் பொதுவெளியில் இல்லாததால், இந்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று தெரியவில்லை.

வருடாந்திர அறிக்கைகள் வெளியிடப்படாதது டாஸ்மாக்கின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமையை காட்டுகிறது. இது பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 

Tamilnadu Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: