தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் சப்-கலெக்டர், டி.எஸ்.பி வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இத்தேர்வை மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் எழுதுகின்றனர். குரூப்-1 பதவிகளில் உள்ள 70 காலி இடங்களுக்கு 2,27,982 பேரும் - குரூப்-1A பதவிக்கு 6,465 பேரும்> குரூப்-1 மற்றும் குரூப்-1A ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 14,849 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் இந்த முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு கண்காணிப்பு பணிக்காக 987 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 12,997 தேர்வர்கள் 48 தேர்வு மையங்களில் தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவோர் TNPSC இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் தங்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலையும் உடன் வைத்து இருக்க வேண்டும்.
செல்போன் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால், தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என்றும் TNPSC அறிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வு எழுத வந்தவர்களை காவல் துறையினர் ஹால் டிக்கெட்களை பரிசோதித்து அவர்கள் சோதனைக்குப் பின்னர் தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத அனுமதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.