தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. மழை பெய்தால் நன்றாக இருக்குமே என்று மக்களுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. அதற்கேற்ப வானிலை மையமும் அப்டேட் கொடுத்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று(ஏப் 25) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் (ஏப் 25) முதல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.