திருச்சியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை ஓரத்தில் நன்றாக வளர்ந்து இருந்த மரத்தை அடியோடு வெட்டி விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் இவருக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வெளியே சாலையோரத்தில் சுமார் 75-ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு வளர்ந்த வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தை தனது கடை வியாபாரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக கருதியுள்ளார் இராமானுஜம்.
இதன் காரணமாக கடந்த 07.05.2025ந் தேதி அதிகாலை சட்ட விரோதமாக திருச்சி மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் மரத்தை வேறோடு வெட்டி விற்றுள்ளார். பொதுஇடத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் சட்டப்படி எழுத்துப் பூர்வமாக அரசிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியில்லாமல் தனிநபர்கள் மரங்களை வெட்டுவதோ, சேதம் விளைவிப்பதோ சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயம் சரத்து (51)(A) பகுதியில் விரிவாக தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகிறது.
மேலும், முறையான அனுமதியோடு பொது பாதுகாப்பிற்காக கூட சாலை விரிவாக்கம் அல்லது இதர வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக குஜராத்தில் வெட்டப்பட்ட சுமார் 150-மரங்களுக்கு, தலா ரூபாய் ஒரு இலட்ச வீதம் 1-1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
எனவே, இந்த வேகாத அக்னி வெயிலிலும் சுமார் 75-ஆண்டுகள் நிழல் தந்து பயன்தந்துள்ள வேப்ப மரத்தை சட்டவிரோதமாக அரசிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், வேறோடு வெட்டி விற்று இலாபமடைந்த இராமானுஜம் மீதும் அவருக்கு இந்த சட்டவிரோத செயலுக்கு துணையாகயிருந்தவர்கள் மீதும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையரும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் உடனடியாக எடுக்கும்படி தாழ்மையுடன் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுகொள்வதாக சமூக ஆர்வலர் நீலமேகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்