பிரதமர் மோடி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக வரும் 27-ந் தேதி அரியலூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பெரம்பலூர் மற்றும் தஞ்சையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருடைய வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை இன்று மேற்கொள்ளப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் பிரதமரின் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.
இதன்பின்னர், திருச்சியிலிருந்து பிரதமரின் விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. பிரதமரின் வருகைக்காக, திருச்சி விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதேபோன்று, தஞ்சை ராணுவ தளத்தில் இருந்தும் பிரதமரின் விமானம் புறப்பட்டு சென்று ஒத்திகை பார்க்கப்பட்டது. திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்வது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. ஒரு பக்கம் ஆளும் கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து பிரசார களத்தில் இறங்கி உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதமரின் தமிழக வருகை அரசியல் நகர்வில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்