திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் அலுவலகத்திற்குள் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். அப்படி வேலை பார்ப்பவர்களில் பலருக்கு பெல் நிறுவனம் தனது குடியிருப்பில் வீடுகள் வழங்கி உள்ளது. சிலர் அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களில் சொந்தமாக வீடுகள் கட்டி அங்கிருந்து பணிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பெல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு சிப்டுகள் இருந்தாலும் பெல் அதிகாரிகளுக்கு காலை 8:30 மணி முதல் 4.30 மணி வரை இந்த பனி காலம் இருக்கும். அந்த வகையில், பெல் நிறுவனத்தின் எஸ்.எஸ்.டி.பி பிரிவில் சண்முகம் (50) என்பவது பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த, வழக்கம் போல் நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்று மாலை 4.30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பவில்லை.
சரியான நேரத்தில் அவர் வீட்டுக்கு வராததால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். சண்முகம் எடுக்காத நிலையில், பெல் நிறுவன அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்தபோது அலுவலக கதவு சாத்தப்பட்டு இருப்பதாகவும் மேலோட்டமாக பார்த்து வந்து தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பெல் ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அறையின் உள் பக்கம் கதவு தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது, சண்முகம் அங்குள்ள சோபாவில் துப்பாக்கியில் தலை பொட்டில் வைத்து சுடப்பட்ட நிலையில் சோபாவில் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேதே பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெல் போலீசார் விசாரணை நடத்தியதில், சண்முகத்திற்கு பார்வதி என்ற மனைவியும், ஒரு மகள் உள்ளார். இதில் மனைவி, பெல் வளாகத்தில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், மகள், தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்து வருகிறார். சண்முகத்திற்கு இதய நோய் பிரச்சனை இருந்து வருவதும் அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது.
மேலும், அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்ட துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது அதன் அடிப்படையில் பெல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெல் நிறுவனத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
க.சண்முகவடிவேல்