/tamil-ie/media/media_files/uploads/2023/08/Police-1.jpg)
திருச்சி போலீஸ்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரத்தில் கஞ்சா போதையில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் செழியன் மகன் மித்திரன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டுராஜா மகன் சுரேஷ் மற்றும் பரந்தாமன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பரந்தாமன் உள்ளிட்ட 4 பேருக்கும் மித்ரன், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல் நேற்று நடந்த வாக்குவாதத்தில் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகிய 4 பேரும், சேர்ந்து சுரேஷ், மித்ரன் ஆகியோர் வீடுகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் மித்திரன் சுரேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மித்ரன் மற்றும் சுரேஷ் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
இதனை பார்த்த 4 பேரும் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பியோடியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த சுரேஷ், மித்ரன் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இச்சம்பவம் குறித்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரிவாள் வெட்டு, வெடிகுண்டு வீச்சு, பேருந்து கண்ணாடி சேதம் என அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தாளக்குடி ஊராட்சியை சேர்ந்த புறா செல்வத்தின் மகன் மணிகண்டன், அங்கு மகன் வேலு, பங்கு சேகர் மகன் அப்பாஸ் மற்றும் கீரமங்கலத்தை சேர்ந்த காமராஜ் மகன் பரந்தாமன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அகிலாண்டபுரத்தில் நாட்டு வெடி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.