திருச்சி, மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் ரமேஷ்குமார், திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ்குமார் தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கோரியுள்ளார்.
தான் கடன் பெறுவதற்கு தனது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கியில் கேட்டதன் பேரில் ரமேஷ் குமார் தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வேண்டி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதியன்று மண்ணச்சநல்லூர் தாலுகாவில் விண்ணப்பித்துள்ளார். தான் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ்குமார் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி அன்று சென்று விசாரித்துள்ளார்.
அங்கிருப்பவர்கள் கல்பாளையம் சர்வேயர் (பிர்கா) கருப்பையா என்பவரை அனுகுமாறு தெரிவிக்க ரமேஷ்குமாரும் கருப்பையாவை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். ரமேஷ்குமாரின் விண்ணப்பத்தினை பரிசீலித்த பிர்கா சர்வேயர் கருப்பையா ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் ரமேஷ் குமார் கடந்த 5-ம் தேதியன்று பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு சர்வேயர் கருப்பையா தனக்கு 6000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் சப் டிவிஷன் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.5000 கொடுத்தால் மட்டுமே சப் டிவிஷன் வேலையை முடித்து கொடுக்க முடியும் என்று கருப்பையா கண்டிப்புடன் கூறியுள்ளார். கருப்பையாவிடம், ரமேஷ்குமார் இரண்டு மூன்று நாட்களில் பணத்துடன் வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் டிஎஸ்பி மணிகண்டன் என்பவரை சந்தித்து புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.மணிகண்டன் அறிவுறுத்தலின்படி இன்று நண்பகல் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சமயபுரம் பைபாஸ் சாலையில் கருப்பையாவை சந்தித்து ரமேஷ்குமார் கொடுத்தார். அதை வாங்கி பையில் வைக்கும்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர்ராணி ஆகியோர்களைக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கருப்பையாவை அவர் பணியாற்றும் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரது அறை மற்றும் வாகனம் போன்றவைகளை சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சர்வேயர் ஒருவர் லஞ்ச பெறும்போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“