திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்தவர் பரணிதரன் (18). இவர், திருச்சி, சமயபுரம் சுங்க சாவடி அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் பிரிவில், படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் இவர், நேற்று வழக்கம்போல மாலை கல்லூரி விடும் நேரத்தில் கணினி பேராசிரியை டேட்டா எண்ட்ரி குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பறையில் இருந்த மணவர் ஒருவர் தவறாக டேட்டா எண்ட்ரி செய்ததாகவும், அதனை கவனித்த பேராசிரியை அந்த மாணவனை கண்டித்தபோது பரணிதரன் தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பேராசிரியை தன்னை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ எடுப்பதாக எண்ணி கடுமையான வார்த்தைகளால் தரணிதரனை வசைப்பாடியுள்ளார். அப்போது தரணிதரன் பேராசிரியையின் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் மாணவனின் மன்னிப்பை ஏற்க மறுத்த பேராசிரியை அந்த மாணவனின் செல்போன் மற்றும் கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை பறித்ததாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து புகார் அளித்து கல்லூரியில் இருந்து நீக்கம் செய்வதாக கூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் மனமுடைந்த தரணிதரன் திடீரென்று கல்லூரியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் உடலில் பலத்த காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் முதல் கட்ட தகவலின்படி, நாலாவது மாடியில் இருந்து மாணவன் குதித்ததால், மாணவனின் முதுகு தண்டுவடத்தில் நான்கு எலும்புகளில் முறிவு ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் பரணிதரன் வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவனின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவனின் தாயார் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. மேலும் அவரது தாயார் தனது மகனை உயர் சிகிச்சைக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதை அடுத்து மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரணிதரன் தாயார் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவன் எடுத்த வீடியோ கைப்பற்றி பேராசிரியரிடமும் விசாரணை தொடர்கிறது. கல்லூரி மாணவர் கல்லூரி வகுப்பறை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்