திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாசலில் மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்டுள்ள புதைவடிகால் குழிகளை உடனே அடைக்க வேண்டும் என அப்பகுதியினரும், சமூக ஆர்வலர்களும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
திருச்சி மாநகராட்சி, கோ அபிஷேகபுர கோட்டம், 8 ஆவது வார்டு, உறையூா், வெக்காளியம்மன் கோயில் அருகில் உள்ள பகுதிகளில் புதைவடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு நடைபெறும் பணிகள் மிகவும் சுணக்கமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
புதை வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படாத நிலையில், அங்கு மிகவும் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மழை காரணமாக அவற்றில் தண்ணீா் தேங்கி வருகிறது. சுமார் 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பணிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பணிகளின்போது, பழைய குழாய்கள் உடைந்து அல்லது கசிந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதாரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையால் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு, உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால் பல்வேறு அசெளகரியங்கள் ஏற்பட்டன.
பின்னா் மஞ்சள்காமாலை பாதிப்புகள், வயிற்று வலி உபாதைகளும் ஏற்பட்டன. இது குறித்து மாநகராட்சி நடவடிக்கைகளால் நிலைமை சீரானது. எனவே, அதுபோன்ற சூழல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளியருகில் நடைபெற்று வரும் புதை வடிகால் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக நல ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார், மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்து கடிதமும் எழுதியிருக்கின்றார். அந்த கடிதத்தில், திருச்சி உறையூர், கோ அபிஷேகபுர கோட்டம், வார்டு எண் -8க்குட்பட்ட வெக்காளியம்மன் கோவில் அருகில் உள்ளது AUROBINDO INTERNATIONAL SCHOOL. இந்த பள்ளி வாசலில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனாலும் பணிகள் இன்று வரை முடிந்தபாடில்லை. மேலும் மேற்படி பாதாள சாக்கடை பணியினால் வெளியேறும் கழிவு நீரினால் மிகபெரும் துற்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், தற்பொழுது டெங்கு உள்ளிட்ட பீதியின் காரணமாக மேற்படி பணிகளினால் தங்களது குழந்தைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்குழந்தைகள் வந்துசெல்லும் பகுதி என்பதால் உடனடியாக அதை சீர் செய்ய வேண்டும். பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பில் மாநகராட்சி அசட்டையாக செயல்படாலம் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். எனவே, திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் உடனடியாக மேற்படி பிரச்சினையை ஆராய்ந்து உடனடியாக மேற்படி பணிகளை முடிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுகின்றேன் என எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.