அமித்ஷா வாயில் இருந்து வருவது எல்லாமே பொய்தான் : அய்யாக்கண்ணு ஆவேசம்

திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் இன்று 8-வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் இன்று 8-வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Ayyakkannu

Ayyakkannu

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  இன்று 8-வது நாளாக வாயில் கருப்புத் துணியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்தப்போராட்டத்தில் அய்யாக்கண்ணு பேசுகையில்,

மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல், விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்  என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் 2016-ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.  

Advertisment
Advertisements

மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம்.  குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ. 10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11.50 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம். மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது , என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.

காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும். தொடர்ந்து இன்று 8- வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விவசாயிகளின் நலன்கள் எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதே போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள்.

உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும். இன்று கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், இன்னமும் அரசு மெத்தனப் போக்கில் செயல்பட்டால், பூச்சி மருந்து குடித்து சாகும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், ராமேஸ்வரத்தில் பாஜக நடைபயணத்தை துவக்கி வைக்க வந்த அமித்ஷா பொய்யையே பரப்புரையாற்றியிருக்கின்றார். அவர் பேசுவதெல்லாம் பொய்தாங்க. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுத்திருப்பதாகவும், விவசாயிகளின் அனைத்து தேவைகளையும், கோரிக்கைகளையும் மத்திய அரசு பூர்த்தி செய்து விட்டதாக பொதுக்கூட்டத்தில் வாய்கூசாமால் பொய் பேசுகின்றார். நம்மாளுகளும் கைத்தட்டுறாங்க. என்னத்த சொல்றதுன்னே தெரியல.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரிக்கை விடுத்தால், அவர் கோதாவடி-காவிரி-குண்டாறு இணைப்பு என்றக் கதையைக்கூறி தப்பித்துக்கொள்கிறார். அமித்ஷா வாய் திறந்து பேசுவதெல்லாம் பொய்தான். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளின் கதி அதோகதிதான். ஆகவேதான் நாங்கள் இன்று வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு, விவசாயிகளின் வாயில் கருப்புத்துணியைக் கட்டாதே, மோடி அய்யா மோடி அய்யா விவசாயிகளைக் கொள்ளாதே என்ற கோஷத்தோடும், போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் என்றார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: