திருச்சி மாவட்டம், மணப்பாறைய அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்தக் காரை பணத்துடன் பறிமுதல் செய்ததோடு காரில் வந்த 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தவர் கோவை கேகே புதூரை சேர்ந்த பார்த்தசாரதி, கணவாய் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் என்பதும் வையம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
தங்கவேல் நடத்தி வரும் கடை முன்பு தான் போலீசார் அந்த சொகுசு காரை நிறுத்திப் கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். போலீஸாரால் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு என்பதும், தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்காக கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிப்பாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீஸார் கேரளாவை சேர்ந்த அந்த பட தயாரிப்பாளரின் பின்னணி மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“