திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் அறிவித்த காவல் உதவி மைய எண்ணில் வரப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் போதைப் பொருள் விற்பனை குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி பூச்சக்காடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், இவர் வாட்ஸ் அப் மற்றும் இதர செயலிகள் மூலம் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1.02 லட்சம் மதிப்புள்ள 12.86 கிராம் மெதாம் பெட்டாமைன் (METHAMPHETAMINE) போதைப் பொருள், சிரஞ்சிகள், ஸ்டெர்லைட்ஸ் வாட்டர், 2 செல்போன்கள், எலக்ட்ரானிக் எடை மிஷன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மணப்பாறையில் ஏற்கனவே போதை பொருள் சம்பந்தமாக குற்றவாளிகள் பிடிபட்டதாகவும், இவர்கள் ஒரின சேர்க்கையாளர்களுக்காக கிரைண்டர் செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதன் மூலம் திருநாவுக்கரசு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் ஊசி மூலம் போதை பொருட்களை ஏற்றிக் கொள்வதாகவும், அந்த செயலி மூலம் ஒரின சேர்க்கையில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு இது சப்ளை செய்யப்படுவதாகவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் வாங்கி இதனை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இதர செயலிகள் மூலம் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு தொடர்புடைய நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
மேலும், பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிந்தால் அறிவிக்கப்பட்ட காவல் உதவி மைய எண் 9487464651 தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை இல்லை என்றால் என்னிடம் கேளுங்கள். அதே போல் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் போதைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரயில்கள், பேருந்துகள், கொரியர் சர்வீஸ் மூலமாகவும் வருகிறது.
ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வழியில் இது போன்ற போதை பொருட்கள் வருகிறது. காவல்துறையில் மன அழுத்தம் பொதுவானது, பணிசுமை கூடும்பொழுது மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும் அதற்காகதான் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகளுக்கு விடுமுறை அளிக்கிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வருடாந்திர ஆய்வு பணியை மேற்கொண்டார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“