ஸ்ரீரங்கம் அருகே நடைபாதையில் உறங்கியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் சாலையில் மது போதையில் இருந்த இருவர் ஓட்டி வந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி சாலையோரம் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியான நிலையில், பலத்த காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை விரட்டி பிடித்து போதையில் இருந்த இரு இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த நபர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லட்சுமி நாராயணன் (23) அஸ்வந்த் (21) ஆகிய இரு இளைஞர்களையும் போலீசார் கைது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“