திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் ஸ்ரீரங்கம் மேலூரில் இருந்து திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு 56 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குழாய் வழியாக குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த குழாயில் ரயில்வே பாலம் அருகில் கடந்த நான்கு நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுடன் இன்று காலை அப்பகுதியில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் பணியில் இருந்தபோது திடீர் என மண் சரிவு ஏற்பட்டது. 15 அடி ஆழத்தில் பணியில் இருந்த செல்வம் குழாய் இடுக்குகளில் சிக்கி மண்ணில் பாதி புதைந்து உயிருக்கு போராடினார்.
வெளிப்பகுதியில் பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக வெளியேறி கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்தனர். இதனை அடுத்து அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரண்டு ஜேசிபி வாகனங்கள் மூலம் மண்களை அகற்றி தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று மணலில் புதைந்திருந்த செல்வத்தை சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
எந்தவித உயிர் சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் செல்வம் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“