ஸ்ரீரங்கம் கோயிலில் 3 வாரத்தில் ரூ.1 கோடியே 92 லட்சத்திற்கு தரிசன சீட்டு விற்பனை ; நம்மாழ்வர் மோட்சத்துடன் சொர்க்கவாசல் நிறைவுபெற்றது.
108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும், முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.
அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்ற பெருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெற்றது. 21 நாள் நடைபெற்ற பெருவிழாவில் சுமார் 14,45,289 பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சொர்கவாசல் அன்று 2.16 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவில் இந்த ஆண்டு மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்வதற்காக கட்டண சீட்டு விற்பனை மட்டும் 1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது.
இதற்கு முன்னதாக ஸ்ரீரங்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக கட்டண சீட்டு விற்பனை ஆனதும், கடந்த காலங்களில் தரிசன டிக்கெட் ரு.300-ஆக இருந்ததும், இந்த ஆண்டு ரூ.100 ஆக குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/