திருச்சி குளித்தலை அருகே நங்கவரம் ஒத்தக்கடை தென்கடைக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமிகளின் ஸ்ரீ தட்ஷீண காளி சித்தர் பீடத்தில், தேஜஸ் சுவாமிகள் உலக அமைதிக்காவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் சமாதி நிலை தியானம் மேற்கொள்வதாக அறிவித்து நேற்று சமாதி நிலை மேற்கொண்டார்.
சமாதி நிலை குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தலையிட்டு 8 மணி நேரத்திற்கு பிறகு அவரை மீட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ் சுவாமிகள் கூறுகையில்,
Advertisment
Advertisements
வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும் மத்திய, மாநில அரசுகளால் நாட்டு மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை மேம்படுவதற்காகவும் ஸ்ரீதட்சண காளி சித்தர் பீடம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பவுர்ணமி தினமான டிசம்பர் 7-ம் தேதி இரவு காற்று புக முடியாத, பாதாள அறைக்குள் சமாதி நிலைக்குச் சென்று பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிருடன் வரக்கூடிய சமாதி தியானம் மேற்கொண்டேன். எனது சமாதி தியானம் என்பது முற்றிலும் மண்ணுக்குள் புதையுண்டு தியானம் செய்வது அல்ல. பூமிக்கு அடியில் ஆறு அடிக்கு மேல் ஆழ பள்ளம் தோண்டி அந்த பாதாள அறைக்குள் தியானம் செய்தேன். பாதாள அரைக்கும் மேலே 24 மணி நேரமும் ஆட்கள் நின்று கொண்டிருப்பார்கள்.
நான் தியானம் செய்யும் போது ஒரு கைத்தடி கையில் வைத்திருப்பேன். சுவாசம் உள்ளடக்கி பிரபஞ்சத்தோடு பேசிக் கொண்டிருப்பேன். அப்படியே எனக்கு ஏதும் நிகழ்ந்தால் என் சிறு கைத்தடி நகர்வின் மூலம், பாதாள அறைக்கு மேலே இருக்கும் சீடர்கள் அறையைத் திறந்து என்னை மேலே கொண்டு வந்து விடுவார்கள். இந்த தியானத்தின் மூலம் மனிதர்களின் கர்ம வினைகள் அகலவும், தர்மம் செழிக்கவும் இந்த சமாதி யோகத்தை மேற்கொள்கிறேன். பல ஆண்டுகளாக இந்த யோகத்தை நான் செய்து வருகின்றேன். சித்தர்களும், மகான்களும் இந்த சமாதி நிலை தியானத்தை பல ரூபங்களில் செய்து வருகின்றனர்.
பாதாள அறைக்குள் சென்றபின் பிரபஞ்சத்தோடு பேசத் தொடங்கி விடுவேன். அந்த சூட்சமங்களை இங்கு சொல்ல முடியாது.மனிதர்கள் தெரியாமல் செய்யும் பாவங்களை நாம் செய்யும் தர்மம் காக்கும். இங்கு பயத்தினால் வரும் பக்தியே அதிகமாக இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கொரோனா வைரஸ் போன்று இயற்கை சீற்றங்கள் பேரிடர்கள் தொடரும் வாய்ப்பு உள்ளது, எனது தியானத்தின் நோக்கம் உலக அமைதி என கூறியுள்ளார்.
இந்நிலையில் இரவு தேஜஸ் சாமியின் சமாதி தியானம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவிலுக்கு வந்து சமாதி தியானம் மேற்கொண்ட தேஜஸ் சுவாமியை போலீசார் வெளியே அழைத்து வந்து சமாதி தியானத்திற்கு சட்டபூர்வ அனுமதி இல்லை என தெரிவித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil