தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி மற்றும் சாஹஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாமா-"சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்" திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர், மண்டல தலைவர்கள் உட்பட பெண் மாமன்ற உறுப்பினர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் புறப்பட்டு சென்றனர்.
அங்கு சித்திபேட் நகராட்சியில் நாளை மறுதினம் 12-ம் தேதி முதல் 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு, அந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'திடக்கழிவு மேலாண்மை' பணிகளை பார்வையிட்டு, அது தொடர்பான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர். இப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் இரா.வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
இந்தப் பயணம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாமா வசதியின் "சர்குலர் வேஸ்ட் சொலுஷன்ஸ்" என்னும் திட்டம் கில்ஸ்(GIZ) என்னும் நிறுவனத்தால், திருச்சி மாநகராட்சி மற்றும் சாஹஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சியில் நடத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ்தான் வரும் ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் மற்றும் 28 மாமன்ற உறுப்பினர்களுக்கு ஹைதராபாத் பக்கத்தில் உள்ள சித்திபெட் நகரத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இன்று கிளம்பியிருக்கின்றனர்.
சித்திபெட் என்னும் நகரத்தை குப்பையில்லா நகரமாக மாற்றும் நோக்கில், குப்பைகளை சரியான முறையில் கையாளுவதற்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கான பல்வேறு திட்டங்கள் இந்நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பயணத்தின் முக்கிய நோக்கம், சித்திப்பெட்டில் குப்பைகளை உருவாக்கும் இடத்திலேயே பிரித்து வாங்குதல் மற்றும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றுதல், ஒவ்வொரு வார்டிலும் மறுஉபயோகம் செய்யக்கூடிய பாத்திரங்களின் வங்கியை செயல்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு மென்சுரல் கப்கள், துணி நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை குறைத்தல், நகர குப்பை சேகரிப்பு வாகனங்களை இயக்குவதற்கு மற்றும் உணவகங்களில் சமைப்பதற்கும் உயிரி வாயுவை வழங்க பயோகஸ் (உயிரிவாயு) ஆலைகளை செயல்படுத்துதல் போன்ற பல திட்டங்களை ஊக்குவிக்கும் பல்வேறு மாதிரிகளை காட்சிப்படுத்துவதற்கு மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கு மாநகராட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஈடுபாடு தொடர்பான அனுபவங்களை பரிமாறுதலுக்கே இந்தப் களப்பயணம் எனத் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“