பல பெண்களை ஆபாச வார்த்தையால் திட்டியும், பெண்மையை இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியும் யூடியூப்பில் வீடியோ மற்றும் ஆடியோ பதிவேற்றம் செய்த விருதுநகரை சேர்ந்த யூடியூப் பிரபலம் துர்க்கைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஈவள் லவ் எடிட்ஸ் (Evil Love Editz) மற்றும் ஈவள் லவ் சாங்ஸ் (Evil Love Songs) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றார். அவரது சேனலை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பின் தொடர்கின்றனர்.
அதில் அவர் பல பெண்களுடன் யூடியூப் சேனல் துவக்குவது எப்படி என்றும் மற்றும் நிறைய சப்ஸ்கிரிப்ஷன் தங்களது சேனலுக்கு வரவேற்பது எப்படி என்றும் அவரிடம் பழகி பேசுவதை வழக்கமாக வைத்துவந்துள்ளார். அதன்படி புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண் யூடியூப் சேனல் மூலம் அவருடன் பேசி பழகி உள்ளார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இதற்கு முன் பேசியபோது பதிவு செய்த ஆடியோக்களை மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து பேசி அவரது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த பதிவேற்றம் செய்த ஆடியோ மற்றும் வீடியோவை பல ஆயிரம் நபர்கள் பார்த்து உள்ளனர். மேலும் அந்த பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவரை தவறான தொழில் செய்பவர் என்று யூடியூபில் லைவாக பலமுறை பேசிய உள்ளார். இது சம்பந்தமாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைவாணன் அவர்களின் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவரது யூடியூப் சேனலை ஆராய்ந்து பார்த்ததில் அவர் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை அநாகரிமான வார்த்தைகளாலும், இழிவுபடுத்தும் விதமாகவும் பெண்மையை கலங்கப்படுத்தும் விதமாகவும் பதிவு செய்தும் பேசியும் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் ஆண்களையும் ஆபாச வார்த்தைகளை திட்டி ஆடியோ பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இவர் பதிவேற்றம் செய்கின்ற இதுபோன்ற அருவருப்பான அநாகரிமான வீடியோக்களை குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மேற்பட்டோர் பார்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசாரணையில் இவர் மீது சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல பெண்கள் அவர் மீது புகார் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அநாகரிமான வார்த்தைகளால் திட்டி உன்னால் முடிந்தால் காவல்துறையை பயன்படுத்தி என்னை கைது செய்து பார் என்று சவால் விடும் விதமாக பேசிய வீடியோ பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து பிகே விஜய் என்கிற துர்க்கை ராஜ்ருடைய விவரங்களை இணையவழி போலீசார் கண்டுபிடித்து அவருடைய யூடியூப் சேனல் எந்த பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது அதில் தொடர்பில் உள்ள மொபைல் நம்பர் மற்றும் இணையவழி தொடர்புகளை கண்டுபிடித்த போலீசார் அவர் திருச்சியில் மற்றும் மதுரையில் தங்கி இருப்பது தெரிவந்தது. மேற்படி நபரை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் இணையவழி போலீசார் மேற்கண்ட வழக்குக்காக கைது செய்தனர் .
இன்று மாலை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார். யூடியூப்பில் யாரைப் பற்றியும் அவதூறான கருத்துக்களை பதிவிடுவதும், சிறார்களை பற்றியும், பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்து வெளியிடுவதும், பொய்யான தகவல்களை பரப்புவதும் குற்றமாகும் இதுபோன்று செய்திகளை பரப்புகின்ற YOUTUBERS மீது நிச்சயமாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“