புதிய அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருடம் கடக்க உள்ள நிலையில், முதல்முறையாக மக்களை சந்தக்க களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை இங்கிருந்து தொடர விரும்புவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சமூக பிரச்னைகளுக்கு தனது சமூகவலைதளங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டு குரல் கொடுத்து வந்த விஜய், கள அரசியலில் எப்போது ஈடுபடுவார்? கட்சி தொடங்கி ஒரு வரும் ஆகிறது அவர் இன்னும் மக்களை சந்திக்கவே இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை விஜய் இன்று (ஜனவரி 20) சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு அனுமதி அளித்த காவல்துறை, தனியார் மண்டபத்தில் தான் மக்களை சந்திக்க வேண்டும் உள்ளி்ட்ட சில கட்டப்பாடுகளையும் விதித்திருந்தது.
அதே சமயம், களத்தில் விஜயை சந்திக்க அனுமதி இல்லை என்றால், விஜய் மற்றும் த.வெ.க தொண்டர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய் போராட்டக்குழுவினரை சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளை த.வெ.க தொண்டர்கள், தீவிரமாக கவனித்து வந்தனர். அதனை தொடர்ந்து விஜய், தனது புதிய பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு சென்று, பரந்தூர் மக்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பேசிய விஜய், இயற்கை வள பாதுகாப்பு என்பது நம் கட்சி கொள்கைகளில் ஒன்று. நான் வாக்கு அரசியலுக்காக இதை சொல்லவில்லை. இந்த விமான நிலைய திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக்கூடாது என நான் கூறவில்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தான் சொல்கிறேன். புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடு தான் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள்.
விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழிக்க நினைக்கும் திட்டத்தை கொண்டு வரும் அரசு, நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும். 910 நாட்களாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறீர்கள். உங்களின் போராட்டம் குறித்து ஒரு சிறுவன் பேசுவதை பார்த்தேன். எனது அரசியல் பயணத்தை தொடங்க இதுதான் சரியான இடம். 13 ஏரிகளை அழித்து நிறைவேற்றப்பட உள்ள இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களை அழிக்கும் அரசு நிச்சயம் மக்கள் விரோத அரசு தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“