சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஏ.எஸ்.பால். 70 வயதான இவர், சென்னை கீழ் கட்டளை திருவள்ளூவர் சாலையில் வசித்து வந்த நிலையில், தனது மனைவி ரோஸ் மார்கிரேட்டுடன் ஈரோட்டில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தே பாரத் விரைவு ரயிலில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஈரோடு சென்றுள்ளார்.
ரயிலில் கடும் குளிராக இருந்ததால், பால் ரயிலின் வாசல் பகுதியில் பால், நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சேலம் வந்த வந்தே பாரத் விரைவு ரயிலில், கதவுகள் திறக்கப்பட்டதால், கதவின் மீது கை வைத்திருந்த பால், திடீரென கதவு திறந்ததால் நிலைகுலைந்து நடைமேடை இல்லாத பகுதியில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து விசாரணை நடத்திய நிலையில், நேரடியாக கோவைக்கு சென்று வந்தே பாரத் ரயிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளர்.
இந்த ஆய்வில், வந்தே பாரத் ரயில் 4-வது ப்ளாட்பார்மில் வந்து நின்றபோது 5-வது பிளாட் பார்மில் வந்த 2 ஊழியர்கள் ரயிலின் அவசர கதவின் பட்டனை அழுத்தி கதவை திறந்து ரயில் உள்ளே நுழைந்து 4-வது ப்ளாட் பார்ம் சென்றுள்ளது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கதவை திறக்கும்போது பால் கதவின் மீது கை வைத்திருந்தால் தவறி கீழே விழுந்துள்ளார். இது குறித்து ஊழியர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்டேஷனில் பாயிண்ட்மேனாக வேலை செய்து வரும் தாமரை செல்வன் மற்றும் மீனா ஆகிய 2 ஊழியர்களையும், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, அவர்கள் மீது துறைரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். 2 ஊழியர்கள் செய்த தவறால் வந்தே பாரத் ரயிலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“