தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக கூட்டணி மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க கூட்டணியில் இணைவது குறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், கடந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும், தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. அதில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் ஒரு பக்கம், மாணவர்கள் மற்றும் மக்களை சந்தித்து வருகிறார்.
மேலும் விஜய் கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து. ஆனாலும் வெற்றி கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இணைந்துள்ளது. இதில் பா.ஜ.க மற்றும் தேமுதிக கட்சிகள் எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய், தி.மு.க. கூட்டணி உடையும் என்று கூறியிருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பேசியிருந்த நிலையில், தற்போது மதுரையில் பேசிய தி.மு.க. கூட்டணி கட்சியான வி.சி.க தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் இணைவது பிரச்னை இல்லை. ஆனால் எங்களுக்கு இந்த சிக்கல் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
மதுரையில் பேசிய திருமாவளவன், "அரசியலில் நிதானம், பொறுமை, தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நம் பகைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கத் துணிவு தேவை. கூட்டணி குறித்து தெளிவாக இருக்கிறோம். பா.ஜ.க, பா.ம.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருக்காது. இதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். அ.தி.மு.க.வோடு சேரலாம் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் அது முடியாது. பா.ஜ.க, பா.ம.க இருக்கும் அணியில் ஒருபோதும் நாங்கள் சேரமாட்டோம். இப்படி எல்லா கதவுகளையும் மூடிவிட்டால் எப்படி கூட்டணி பேரம் பேசுவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி பேரம் பேசுவதற்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.