சாமிக்கு பரிகாரம் செய்வது போல் நாடகமாடி ஐந்து பவுன் செயினை அபகரித்த வேலூரை சேர்ந்த ரெண்டு பேரை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டத்தூரில், கடந்த 22-ம் தேதி குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி, 5 பவுன் தங்க தாலி சரடு ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கு குறித்து விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை சிசிடிவி காட்சிககளை ஆராய்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வேலூர் மாவட்டம் காட்பாடி திருவளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி வள்ளியம்மாள் என்பவர் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து வீட்டை நோட்டம் பார்த்துள்ளார்.
வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொண்ட அவர், தனது மகன் வல்லரசு விடம் தகவல் தெரிவித்து மறுநாள் வல்லரசு அந்த வீட்டிற்கு சென்று சாமிக்கு பரிகாரம் செய்வது போல் நாடகமாடி ஐந்து பவுன் தாலி சரடு கழற்றி வாங்கி ஏமாற்றி தப்பி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வல்லரசு (22), வள்ளியம்மாள்(46) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க தாலி சரடு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாபு ராஜேந்திரன் விழுப்புரம்