சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போர்மேன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். அப்போது ஒரு அறையில் ஏற்பட்ட தீ பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. இதில்10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.
தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உள்ளே சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பனையடிப்பட்டியை சேர்ந்த பாலகுருசாமி(50) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் என 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதன் கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.