Cyclone Gaja: கஜ புயல் தமிழகத்தை மிரட்டுகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் கஜ, நவம்பர் 15-ம் தேதி கரையை கடக்கிறது. கடலூருக்கும், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே அது கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பலத்த மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கஜ என்பது இலங்கை அளித்திருக்கும் பெயர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் இடையே வரிசை கிரமமாக புயலுக்கு பெயர் வைக்கும் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப் படுகிறது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்தப் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Gaja Cyclone Alerts: கஜ புயல், வட தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை வரைபடம் வெளியிட்டது.
Cyclone Gaja, Tamil Nadu to get rainfall: சென்னையை நோக்கி நகரும் கஜ புயல்:
வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதன்கிழமையன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் நேற்று (நவம்பர் 10) தெரிவித்தார். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றாழுத்த தாழ்வு வலுபெற்று புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறுகிறது. அப்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தீவிர புயல் சின்னமாக மாறும். அந்த சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
அதன் பிறகு, அந்த புயல் 14-ந் தேதியன்று (புதன்கிழமை) வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக 14-ந் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி எண்ணூர், காரைக்கால், உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 11) மதியம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர், ‘கஜ, புயலாக உருவெடுத்துவிட்டது. வருகிற 15-ம் தேதி இது கடலூருக்கும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்றவர்கள் 12-ம் தேதிக்குள் திரும்பவேண்டும். இந்தப் புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்’ என்றார்.
கஜ புயல், வட தமிழகத்தை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான வரைபடங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பாளையங்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் பேரிடர் மேலாண்மை இயக்குனர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ்., ‘புயல் பாதிப்பு குறித்து நாளை முழுமையாக தெரியும்’ என்றார்.
இதற்கிடையே கஜ புயலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.