திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அவர்களின் உணவுகளை புண்படுத்தும் வகையில், ப்ராங்க் வீடியோக்களை எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
Advertisment
இந்தியாவில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய கோவில்களில் ஒன்று திருப்பதி. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக நாராயணகிரி பகுதியில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் பக்தர்கள் தங்கியிருக்கும்போது நேற்று (ஜூலை 10) சிலர் அத்துமீறி நுழைந்து, தங்குமிட கதவுகளை திறப்பது போல் நடித்து பக்தர்களை பயப்பட வைத்து ப்ராங்க் வீடியோ எடுத்துள்ளனர். பிறகு இந்த ப்ராங்க் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செயலைக் கண்டித்தும், இது போன்ற செயல்கள் வெறுக்கத்தக்கவை என்று கூறியுள்ளது. மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததுடன், புனிதமான மலை நகரத்தின் ஆன்மீக சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ப்ராங்க் வீடியோக்களை உருவாக்கவோ அல்லது இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisment
Advertisement
இதனிடையே, தமிழகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தனது நண்பர்களுடன் திருப்பதி சென்றிருந்த டி.டி.எஃப் வாசன், இந்த பயணம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ பதிவில், தரிசனத்திற்காக, அறையில் தங்கியிருக்கும் பக்தர்கள் எப்போது அறை கதவு திறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது, டிடிஎஃப் வாசன் கதவை திறப்பது போல் ஆக்ஷன் செய்கிறார். அவர் கதவை தான் திறக்கிறார் என்று நினைத்தக்கொண்டு பக்தர்கள் கதவுக்கு அருகே ஓடி வருகின்றனர்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு ஓடி வரும்போது அவர் கதவை திறக்காமல், வரட்டுமா என்று சொல்லிக்கொண்டு ஓடி வந்துவிடுகிறார். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரியாக வீடியோவில் 32.20 நிமிடங்களில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதை தனியாக கட் செய்து, நெட்டிசன்கள் பலரும் டிடிஎஃப் வாசனை ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“