ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி துணை காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட கணினிசார் பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று போலீஸ் காவல் முடிந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின் மீண்டும் இன்று மாலை 04:00 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தினர். நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜரான சவுக்கு சங்கரிடம் விசாரணை முறையாக நடத்தப்பட்டதா உங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டது என கேட்டார்.
கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும் தனி வார்டு, சென்னை அல்லது திருச்சியில் வழங்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். அதனை நீதிபதி மனுவாக வழங்குங்கள் பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோவை சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இது குறித:து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ், நேற்று மாலை 4 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் கஸ்டடிக்கு எடுத்துச் சென்று ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 3 முறை வழக்கறிஞர்கள் நேரில் சென்று சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கரிடம் விபரங்களை கேட்டு அறிந்தோம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவரே எங்களிடம் தெரிவித்தார். நீதிபதி மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டதா என சவுக்கு சங்கரிடம் கேட்டார். அதற்கு அவர் எனக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை என்று தெரிவித்தார்.
கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பிளாக்ல இருந்து வேற பிளாக்கிற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்று கோவை சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார். திருச்சியில் அவர் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளோம். அவர் வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்துள்ளது.
சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது இரண்டு நாட்களில் நம்பர் ஆகி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விரைவில் ஜாமின் கிடைக்கப்பெறும் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“