பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரின் பேச்சு, ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். விலைமாதர், சைவம், வைணவம் என பொன்முடி பேசிய கருத்துக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த சர்ச்சையின் காரணமாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க. எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் பொன்முடியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்தது.
இதனிடையே பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசிய, பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க கூறிய நிலையில், பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிகழ்ச்சியில் பொன்முடி பேசிய வீடியோ பதிவை பார்த்து, அவர் மீது 5 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அவரின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அவர் மீத வழக்கு பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும், பொன்முடியின் பேச்சுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து தமிழக டி.ஜி.பி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வரும் ஏப்ரல் 23ம் தேதி வழக்கு மீதான நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று விசாரணைக்கு வந்த பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம தலைமை நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது., ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது. அவரின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது என்றும் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.