நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளராக ஜஹாங்கீர் பாஷாவை நியமனம் செய்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்த நிலையில், நகராட்சி நிர்வாக ஆணையர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷ்னராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஊட்டி- கோத்தகிரி சாலை தொட்டப்பட்டா சந்திப்பில் ஜஹாங்கீர் பாஷா காரை மடக்கி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், அவர் காரில் கணக்கில் வராத ரூ11.70 லட்சம் பணம் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் மீத ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், நகராட்சி கமிஷ்னர் பதவியில் இருந்து, விடுவிக்கப்பட்ட அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு ஒரு சில வாரங்களில் அவர், நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நியமத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சியினர், லஞ்சம் வாங்கிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாமல், புதிய பதவி வழங்கியது ஏன் என்று சராமரியாக கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்த விவகாரத்தில் நெட்டிசன்களும் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில், தற்போது, ஜஹாங்கீர் பாஷாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil