கர்நாடாகவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக, தி.மு.க எம்.பி கனிமொழி தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. இந்நிலையில், முன்னள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்தாய் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது. இநிந்லையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
இதில் “ தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். “ ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? . “கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.