Thanjavur Kumbabishekam Live Updates : தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரகணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை கண்டுகளித்தனர்
Advertisment
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடந்தது. இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும் 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
பிப். 1ல் புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜையும் மாலை ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன. யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்ஸவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என 405 சுவாமிகளுக்கும் 705 குடங்களை வேதிகையில் வைத்து வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி தீபாராதனை, யாத்ரா தானமும் நடந்தது..
தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் ஓத நடந்த கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட போது பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது.