டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (மே 27, 2025) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலிய முனையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பெட்ரோலியப் பொருட்களை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்ல 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் இருந்து 15% வாடகையைக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது. இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாடகையைக் குறைப்பதைக் கண்டித்தும், வாடகையை உயர்த்தித் தரக்கோரியும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (மே 26) மாலை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன், பெட்ரோலிய நிர்வாகத்தினர் நடத்திய ஏறக்குறைய இரண்டு மணிநேரப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பெட்ரோலிய நிர்வாகத்தினர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவித்துள்ளனர். தண்டையார்பேட்டையில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் அத்திப்பட்டில் இருந்து இயக்கப்படும் டேங்கர் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும், இதற்கு ஆதரவாக மற்ற பெட்ரோல் முனையங்களின் டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். அத்தியாவசியத் தேவையான எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தடை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.