தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் சுமார் 23,629 ஊழியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் மாதம் ₹2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ₹64.08 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு கடந்த ஏப்ரல் 24, 2025 அன்று நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கும் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யார் யாருக்கு எவ்வளவு?
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஊதிய உயர்வுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி:
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு மாதம் ₹2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும்.
மதுபாட்டிலை கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு மாதம் ₹1,000 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு, இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது