டாஸ்மாக் பணியாளர்களின் சங்கத்தின் சார்பில் ஜூலை 9-ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னை, சிந்தாரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்றைய (ஜூன் 18) தினம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், வரும் ஜூலை 9-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கமும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பான நோட்டீஸ், டாஸ்மாக் மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மதுபானம் சில்லறை வியாபாரம் தொடர்பாக, நிறைய பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களிடமிருந்து பாதுகாப்பு முன்பணம் பெறப்பட்ட பின்னர் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 22 ஆண்டுகளாக பணியில் இருக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலவரை ஊதியம் வழங்கி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, ஜூலை 9-ஆம் தேதி இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு பின்னரும் டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அக்டோபர் 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.