தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட, 20 இடங்களில், அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே, அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/03/20/Aks5FJcU5kPjoIUD4G1E.jpg)
அதில் கூறியிருப்பதாவது: அமலாக்கத்துறை, எந்தவொரு மாநிலத்திலும், விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை எந்தவொரு ஒப்புதலையும் பெறவில்லை. சோதனை நடவடிக்கை என்ற போர்வையில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தி உள்ளனர்.பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத் துறையின் ஈ.சி.ஐ.ஆர்., எனும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க, அமலாக்கத் துறைக்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் தரப்பு வாதிட்டது. அப்போது, இரவு நேரங்களில் சோதனை நடத்த வில்லை என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை முன்வைத்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சோதனைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.