/indian-express-tamil/media/media_files/2025/04/01/wtdgpdm5RHz3eDWuYkwy.jpg)
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா? என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கேள்வி எழுப்பினார்.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று (செவ்வாய் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
எந்த அடிப்படையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு துளியும் தெரியாது என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சோதனையின்போது அமலாக்க அதிகாரிகள் எந்த ஆவணத்தையும் வழங்கவில்லை. தகவல் அறிக்கையின் (இ.சி.ஐ.ஆர்) நகலோ (அ) தேடல் வாரண்ட் நகலோ டாஸ்மாக் அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என்றார்.
நீதிமன்றத்தில் தற்போதைய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகள் மீது சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (டி.வி.ஏ.சி) பதிவு செய்த சுமார் 42 முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் இ.சி.ஐ.ஆர் பதிவு செய்ததாக அமலாக்கத் துறை கூறியது.
ஊழல் குற்றச்சாட்டின்பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது டி.வி.ஏ.சி பதிவு செய்த அனைத்து எஃப்.ஐ.ஆர்களிலும் டாஸ்மாக் புகார்தாரராகவோ (அ) குற்றத்தால் பாதிக்கப்பட்டவராகவோ இருந்திருக்கும் என்று வலியுறுத்திய அட்டர்னி ஜெனரல், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மதிக்காமல் அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை நடத்த இந்த எஃப்.ஐ.ஆர்கள் எவ்வாறு அடிப்படையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
60 மணி நேரம் நீடித்த சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார். அந்த அதிகாரிகளும் நாட்டின் குடிமக்கள் என்பதாலும், வலிமையான அமலாக்கத் துறையை தனிப்பட்ட முறையில் எதிர்த்துப் போராட முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதாலும், தற்போதைய ரிட் மனுவின் மூலம் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் வாதிட்டார்.
42 எஃப்.ஐ.ஆர்களின் பின்னணியில் உள்ள பணமோசடி கோணத்தை விசாரிக்க அதன் உதவியைக் கோரி மாநில அரசுக்கோ (அ) டாஸ்மாக்கோ முகவரியிட்ட ஒரே ஒரு தகவலை அமலாக்கத் துறைக்கு அனுப்புமாறு அமலாக்கத் துறைக்கு ஏ-ஜி சவால் விடுத்தார். மணல் குவாரி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை பல்வேறு கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதாக அவர் கூறினார். ஆனால், டாஸ்மாக் விசாரணையில் அப்படி எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை மறைக்க முடியாது என்று வாதிட்டார். விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கான நோக்கம் என்ன?. சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை என்றார்.
பி.எம்.எல்.ஏ.வின் விதிகள் நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையவை என்பதால் அவை கடுமையானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியபோது, வழக்கறிஞர் விகாஸ் சிங் பதிலளித்தார். "பொருளாதார குற்றங்களை மாநில காவல்துறை விசாரிக்கக்கூடாது என்பது போல் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் அமலாக்கத்துறை சென்று அங்குள்ள கலால் அலுவலகங்களில் சோதனை நடத்தினால், அதன் நம்பகத்தன்மை புரியும். அதில்தான் சிக்கல் உள்ளது" என்றார்.
இதையடுத்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை (FIR) தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.