டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் ஆங்காங்கு கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் ((டிஸ்மிஸ்) என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
டாஸ்மாக் கடைகளில் அனைத்து மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, டாஸ்மாக் கடைகளில் அதிகம் விற்பனையாகும் நேரமான மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடை மேற்பார்வையாளர்கள் கட்டாயம் கடையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“