scorecardresearch

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்த கோரி போராட்டம்

40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

tamilnadu
Age relaxation for teachers appointment

ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பை 57 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆகவும் இருந்தது. அதாவது, 57 வயது ஆனாலும் ஆசிரியர் பணியில் சேரலாம் என்று இருந்தது. பின்னர் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதன் காரணமாக, 59 வயது வரை உள்ளவர்கள் பணியில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதற்கு மாறாக ஆசிரியர்களின் பணி நியமத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதி 177ன் படி, பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

3 நாட்கள் தொடர் போராட்டத்தில் இருந்து வரும் பயிற்சி ஆசிரியர்களுக்கு நேரில் சென்று ஆதரவளித்த பாமக தலைவர் ஜி.கே. மணி ஆசிரியர்களுக்கு என்றும் துணையாக பாமக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது 2 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Teachers appointment age chennai teachers protest age relaxation for teachers appointment