சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதன்மைச் செயலாளர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு
இதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil