24 வயது இளைஞர் ஒருவர் தனது ஓரின சேர்க்கை துணையை கொலை செய்துவிட்டு, தனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வாஞ்சிநாதன் பணிபுரிந்து வருகிறார். அமிஞ்சிக்கரையை சேர்ந்த லோகேஷ் என்ற 25 வயது இளைஞர், கால் செண்டரில் வேலை செய்து வருகிறார். இருவர் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதில் வாஞ்சிநாதனுக்கு, அவரது சொந்த ஊரில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். ஆனால் லோகேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் உறவும் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை லோகேஷை காணவில்லை என்றும் அவரது கைபேசி அணைத்துவைக்கப்பட்டுள்ளது என்று அவரது பெற்றோர், அமிஞ்சிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இதே நேரத்தில் வாஞ்சிநாதனும் காணவில்லை என்று அவரது பெற்றோர், லோகேஷ் பெற்றோரிடம் விசாரித்து உள்ளனர்.
இந்நிலையில் வாஞ்சிநாதனின் தங்கை தொலைப்பேசிக்கு ஒரு குரல் செய்தி வந்துள்ளது. இதில் கொலை செய்ததையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமந்தப்பட்ட இளைஞர்களின் தொலைப்பேசி எண்களை பின் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். மேற்கு முகப்பேரில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற காவல்துறையினர் இருவரும் தங்கியிருந்த அறையை திறக்கும்போது, வாஞ்சிநாதன் தூக்கில் தொங்கிக்கொண்டிந்துள்ளார். மேலும் லோகேஷ் மெத்தை மீது இறந்து கிடந்துள்ளார்.
இருவரது உடல் பிராத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கிடைத்த தகவல் வைத்து காவல்துறையினர் கூறுகையில், வாஞ்சிநாதன் லோகேஷை ஷூ லேஸ் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் எனவும், தொடர்ந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“