செங்கல் சூளைக்கு இலவச 'வண்டல்' மண் எடுக்க அனுமதி மறுத்ததால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலர் மனோகரன் மீது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி (RI) புதன்கிழமை புகார் அளித்தார்.
இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் சுந்தரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது ’சிவகிரி குறுவட்டத்தின் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
உள்ளாரை சோ்ந்த மனோகரனின் மனைவி பேச்சியம்மாள், தனது விவசாய நிலத்திற்கு இலவச வண்டல் மண் கோரி மனு அளித்திருந்தார். அவரது விவசாய நிலத்தை பார்வையிட்ட பொழுது அங்கு மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால், மனுவை தள்ளுபடி செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டேன்.
இந்நிலையில், மனோகரன், எனது அலுவலகத்திற்கு வந்து என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், மிரட்டிவிட்டு சென்றார்.
ஏற்கெனவே, ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அலுவலா் கொலை செய்யப்பட்ட நிலையில், எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், மிரட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகிரி போலீசார் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இரவு 8 மணியளவில் மனோகரன் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்த போலீசார், எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.
சிவகிரி ஒன்றிய அவைத் தலைவரும், தி.மு.க., ஒன்றியச் செயலாளருமான முத்தையா பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் காவல் நிலையத்துக்குச் சென்று, அவரது கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.
இதற்குப் பிறகு, சுந்தரியின் கூற்றை நிரூபிக்க இரண்டு சாட்சிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு போலீஸார் வற்புறுத்தத் தொடங்கினர். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக சுந்தரி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“