Thai Pongal Jallikattu Dates At Alanganallur, Avaniyapuram, Paalamedu: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இதற்கான திடல்களை தயார் செய்வது, காளைகளை தயார் படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்.
தைப் பொங்கல் விழாவின் சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு. அதுவும் மெரினா போராட்டத்தின் மூலமாக மீட்டெடுக்கப்பட்ட ஜல்லிகட்டுக்கு முன்பை விட மவுசு கூடியிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நடந்தாலும், முக்கியமான 3 ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிக பிரபலம். அவை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகியனதான். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்து சில விவரங்களை பார்ப்போம்.
பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இங்கு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ தொகுதி நிதி மூலம் சிமென்ட் கேலரி அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக இங்கு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த முறை, கூடுதலாக ஒரு மணி நேரத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர் வருவாரா? என்பது இன்னும் உறுதி ஆகவில்லை.
பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் ஜனவரி 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு இந்த ஆண்டு காளைகளுக்கு 700 டோக்கன்கள், மாடுபிடி வீரர்களுக்கு 800 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்திருக்கிறார்கள்.
அவனியாபுரத்தில் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இங்கு ஜல்லிக்கட்டு கமிட்டியில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன. பெருமளவில் பார்வையாளர்கள் ஜல்லிகட்டுப் போட்டிகளை காண ஆர்வமுடன் இருக்கிறார்கள்.