கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடசலாபதி திருக்கோவிலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று 4ஆம் ஆண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர். காந்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், “அதிமுக சின்னம் இடைத் தேர்தலில் மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா எங்களின் கூட்டணிக் கட்சி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி இதனை தெளிவாக கூறிவிட்டார்” என்றார்.
தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசுகையில், “சென்னையில் இருந்து கொண்டு ஒருவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்போம்.
ஆனால் வேட்பாளரை எதிர்ப்போம்” என்றுள்ளார். இந்த விசித்திர அறிவிப்பை பார்த்து அடக்கமுடியாதா சிரிப்பு தான் வருகிறது” என்றார்.
மேலும் கமல்ஹாசனின் காங்கிரஸ் ஆதரவு குறித்த கேள்விக்கு, “ஈரோட்டில் அதிமுகவுக்கு ஆதரவாக அஜித், விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அதை என் கண்ணால் பார்த்தேன்” என்றார்.
தொடர்ந்து, “திமுகவின் ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்னைகள் உள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிற்காது, திமுக நின்றிருந்தால் களம் இன்னமும் சூடு பிடித்திருக்கும்.
தமிழக தாய்மார்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி தொடர்பான கேள்விக்கு, “நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/