அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது, “மக்களவை தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. உடன் கூட்டணி வைப்பார். நான் சொல்வது நடக்கிறதா, இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள்” எனப் பேசினார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
அதற்கு தூத்துக்குடி வி.ஏ.ஓ. படுகொலை ஓர் சாட்சி. ஊட்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் அடுத்தடுத்த சாட்சிகள்” என்றார்.
மேலும், “வி.ஏ.ஓ. படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்திய அவர், “இது தொடர்பாக வி.ஏ.ஓ புகாரும் கொடுத்துள்ளார். அப்போதே ஒரு எச்சரிக்கை உணர்வுடன் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்னை குறித்து அவர் பேசுகையில், “அ.தி.மு.க என்பது ஒரு பெரிய ஆலமரம். இந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள் தனியாக ஒரு கட்சியை தொடங்குவது, தனியாக ஒரு மாநாட்டை நடத்துவது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடைபெற்றது உண்டு.
இதனைப் பொதுமக்கள் யாரும் வியந்து பார்ப்பதில்லை, இப்படி மாநாடு நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தனி மரம், இனி அது தோப்பாகாது என்பதை அவருடன் இருக்கும் சிலர் விரைவில் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“