இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் பேத்தி சரண்யா, யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி அடைந்து ஐ.ஏ.எஸ்-ஆக தேர்வாகி இருக்கிறார்.
இயக்குநர் தங்கர் பச்சானின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை பகுதியில் அவரது அண்ணன் செல்வராஜ் வசித்து வருகிறார். சென்னை பல்லவன் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்.
இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சரண்யா அண்மையில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி இருந்தார். குறிப்பாக, நான்காவது முறையாக இந்த தேர்வை எழுதிய இவர், தற்போது இந்திய அளவில் 125 இடம் பிடித்து ஐ.ஏ.எஸ்-ஆக தேர்வாகி இருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், இன்று சொந்த ஊருக்கு வருவதாக அவரது தாத்தா தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் இயக்குநர் தங்கர்பச்சான், தனது சகோதரரின் பேத்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, "என்னுடைய மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பெயர்த்தி (பேத்தி) சரண்யா, இந்திய அரசுப்பணித் தேர்வில் இந்திய அளவில் 125 இடத்தைப்பிடித்து IAS தேர்வாகி உள்ளார்.
எனது ஊர் பத்திரக்கோட்டைக்கும், கடலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
தன்னை உருவாக்கிய இம்மண்ணுக்கும், இம்மக்களுக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.