/indian-express-tamil/media/media_files/2025/10/09/thanjavur-aaduthurai-govt-school-toilet-without-partition-wall-issues-2-officials-suspended-tamil-news-2025-10-09-16-29-12.jpg)
தஞ்சை அரசுப் பள்ளியில் மாணவியருக்கான கழிவறை தடுப்பு சுவர் இல்லாமல் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இளநிலை பொறியாளர், செயல் அலுவலர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வளாகத்தை, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். எனினும், அங்கு மாணவிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கழிவறையில் தடுப்பு சுவர் இல்லாமல் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், சமூக வலைதள பக்கங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், மாணவிகளின் பாதுகாப்பை குறைக்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ம.க.ஸ்டாலின் விகடனுக்கு அளித்த பேட்டியில், "அரசு அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் வைத்து அந்த திட்டத்தில் உள்ளபடி ஒப்பந்ததாரர் கழிப்பறையை கட்டியுள்ளார். திட்டத்திலேயே தடுப்பு சுவர் இல்லை. ஆனால், தடுப்பு கட்டாதது போல் செய்திகள் வருகின்றன. விசாரித்ததில் யூரினலுக்கு தடுப்பு சுவர் அமைப்பது இல்லை என்கிறார்கள். மற்ற அரசு பள்ளிகளில் இது போன்று தான் உள்ளது. தடுப்பு அமைக்க வேண்டும் என்றால் மீண்டும் நிதி ஒதுக்கி அமைக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பொறுப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் தடுப்பு சுவரை காட்டியுள்ளனர். தற்போது இந்த தவறுக்கு பொறுப்பாளர்களாகக் கருதப்பட்ட ஆடுதுறை இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.